"இந்தக் குழந்தை மட்டும்
பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ
எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!”
என்னை நோக்கி - அதுவும் ஒரு பெண்ணியவாதியான என்னை நோக்கி - சொல்லப்பட்ட
வார்த்தைகள், எறியப்பட்ட நெருப்புத்
துண்டங்களைப் போல என்மீது அனலைக் கக்கின!!
சொன்னது என் மாமியாரோ, நாத்தனாரோ அல்ல. என்
உயிரினும் மேலாக நான் நேசிக்கும் அந்த ஜீவன்!! நான் இருப்பது உசிலம்பட்டி போன்ற கிராமமுமில்லை.
நவ நாகரீக நகரமான அபுதாபியில்!! இங்கே வந்தபின்பும் சிந்தனைகளில் மாற்றங்கள் வரவில்லை
என்றால்.....
முதல் குழந்தை உண்டானதும், நானே ஆண்குழந்தைக்கு
ஆசைப்பட்டுப் பிரார்த்தித்தேன். ஆண்வாரிசு
அவசியம் என்றல்ல. பெட்டி பெட்டியாக தங்க நகைகள் இருந்தாலும், பார்க்கும் ஒரு இமிடேஷன்
நகை ஆசையைத் தூண்டுமே, அப்படி ஒரு ஆசை. கேட்டுவிட்டேன், கொடுத்து விட்டான்.
ஆண் குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை அயர்ச்சியான அனுபவமாக இருக்கும் என்று பிறகுதான் தெரிந்தது. பெண்கள் மட்டுமே நிறைந்த வீட்டில் வளர்ந்த
எனக்கு தெரிந்தவை, சுத்தம் சுகாதாரம்
ஒழுங்கு அழகுணர்ச்சி மட்டுமே. சவூதியில் இருந்த வாப்பா வருடத்திற்கொரு முறை மட்டும்
வந்து போவதால் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை.
கணவர் என்று ஒரு ஆண் வாழ்க்கையில் நுழைந்த பின்புதான் ஆண்களின்
“பழக்க வழக்கங்கள்” புரிந்தது!! சுத்தம்-சுகாதாரம்-ஒழுங்கு-அழகுணர்ச்சி
ஆகியவற்றின் எதிர்ப்பதங்களை எனக்கு live-ஆக தினம் தினம் demo காட்டி, இப்படியும் ஒரு ”இனம்” உலகில் உள்ளது என்று
எனக்கு உலகத்தைப் புரியவைத்து, சவால்களை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள ஆண்டவன் அனுப்பி வைத்த ”ஆயுட்கால டெஸ்ட்”தான் என் கணவர் என்று
முதல் நாளே தெரிந்து கொண்டேன்.
அப்பவும் “#வளர்ப்பு” சரியில்லாததாலேயே அப்படி என்று நம்ம்ம்ம்பி, “எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்” என்று கனவு கண்டு
ஒரு மகனைப் பெற்றேன்!! அவனும் வளரும்போதுதான் எனக்கு கன்ஃபார்மாக ஒரு விஷயம் புரிந்தது.
இது வளர்ப்பின் கோளாறல்ல, “manufacturing
settings"-ஏ அப்படித்தான் என்று!!
காரணமில்லாமலா களிமண்ணிலிருந்து ஆணைப் படைத்தான் இறைவன்!!
வீடு முழுதும் ஆங்காங்கு எறியப்படும் குப்பைகள், மூலைகளையும் சுவரோரங்களிலுமாக
குறிபார்த்து வீசப்படும் அழுக்குத் துணிகள், கட்டிலில் சுருட்டி
எறிந்த ஈரத்துண்டுகள், தரையில் அழுக்குடன் கூடிய கால்தடங்கள் - சின்னதும் பெரிதுமாக
இரண்டு செட்களில்....
இது போதாதென்று கண்ட இடத்திலும் போட்டு வைக்கப்பட்டிருக்கும்
ஸ்க்ரூ ட்ரைவர்,
ஆணிகள், நட்டு, போல்ட் போன்ற ஆயுதங்களுடன்
அக்கு வேறு ஆணிவேறாகக் கழட்டி போடப்பட்டிருக்கும் ஃபேன், டிவி, மிக்ஸி போன்ற வீட்டுப்
பொருட்கள் ஒரு பக்கம்; அதைப் பார்த்து, அதேபோல பீஸ் பீஸாக கழட்டிப் போடப்பட்ட நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்
விளையாட்டு பொருட்கள் இன்னொரு பக்கம்.....
இது வீடா, மெக்கானிக் ஷாப்பா, குப்பை மேடா என்று
தீர்மானிக்க முடியாத நிலையில் நான்!! இந்த அராஜகங்களில் இருத்து தப்பிக்க என்ன வழி
என்று யோசித்தேன். அப்போத்தான் முடிவு பண்ணேன், அடுத்த குழந்தை பெண்ணாக இருந்தாலொழிய எனக்கு
விமோசனமில்லை என்று!!
அந்த “நல்ல செய்தியைப்” பகிர்ந்த போதுதான், என் காதுகளில் ஈயத்தைக்
காய்ச்சிக் கொட்டியதுபோல வந்து விழுந்தன அந்த வார்த்தைகள். சொன்னது யார் என்பதைத்தான்
என்னால் நம்பமுடியவில்லை. வேறு யாரென்றாலும் அதில் அவர்கள் அளவில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால்...
ஆனால்....!! சரி,
போகட்டும் பிறிதொரு
சமயம், நல்ல மூடில் இருக்கும்போது
கேட்டுப் பார்க்கலாம் என்று, ஒரு சில நாட்கள் கழித்து ”கண்ணே பொன்னே மணியே
என் செல்லமே தங்கமே” என்று கொஞ்சலோடு கேட்டால்...
அப்போதுதான் அறுதியிட்டு உறுதியாகப் பதில் வந்தது....
"இந்தக் குழந்தை மட்டும்
பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ
எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!”
-தொடரும்.
(”டீக்கடை” என்ற முகநூல் குழுமத்தின் ”Memory book- sweet & salt” போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.)
இரண்டாம் பகுதி இங்கு
-தொடரும்.
(”டீக்கடை” என்ற முகநூல் குழுமத்தின் ”Memory book- sweet & salt” போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.)
இரண்டாம் பகுதி இங்கு
|
Tweet | |||
9 comments:
உங்க பெரிய மகன் தான் சொல்லியிருக்க வேண்டும் ஹுஸைனம்மா. எனக்கும் இதே அனுபவம் உண்டு. என சின்ன பெண் பிறப்பதற்கு முன் என் பெரியவள் என்னிடம் இப்படித்தான் சொன்னாள். “அது தம்பி பாப்பா என்றால் ஆஸ்பத்திரியிலே கொடுத்துட்டு வந்துடு. தங்கச்சி பாப்பான்ன எடுத்துண்டு வா!” என்று...
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..
ஆண்கள் அப்படி ஒன்றும் அசுத்தமானவர்கள் அல்ல என்பது எங்கள் அனுபவம்! தொடர்கிறேன்.
ஆ!
ஆண்கள் மட்டுமே சுத்தமானவர்கள் என்று பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.
////சுத்தம்-சுகாதாரம்-ஒழுங்கு-அழகுணர்ச்சி ஆகியவற்றின் எதிர்ப்பதங்களை எனக்கு live-ஆக தினம் தினம் demo காட்டி////
வீடு முழுக்க பெண்கள்னு வளர்ந்த எனக்கு தெரியாதா இது காமெடியின்னு?!
Awesome Hussain amma. Well written.
நூறில் ஒரு சிலரே (அன்னையிடம் அன்பில்லாத) இப்படி இருப்பார்கள்...
எல்லா ஆண்களும் அப்படியல்ல என்றாலும் பெரும்பாலான ஆண்கள் நீங்கள் சொல்வது போலத்தான் என்பதை ஒத்துக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயம் எனக்கு. உள்ளே நக்கல் பூரணம் வைத்த அழகான எழுத்துக் கொழுக்கட்டை... ருசிக்கிறது.
//அப்பவும் “#வளர்ப்பு” சரியில்லாததாலேயே அப்படி என்று நம்ம்ம்ம்பி, “எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்” என்று கனவு கண்டு ஒரு மகனைப் பெற்றேன்!! அவனும் வளரும்போதுதான் எனக்கு கன்ஃபார்மாக ஒரு விஷயம் புரிந்தது. இது வளர்ப்பின் கோளாறல்ல, “manufacturing settings"-ஏ அப்படித்தான் என்று!! காரணமில்லாமலா களிமண்ணிலிருந்து ஆணைப் படைத்தான் இறைவன்!! //
செம..செம.. ஆனாலும் பாவம்... உங்ககிட்ட அவங்க படுறதெல்லாம் வெளியே சொல்லக்கூடத் தெரியாத அப்பாவிங்க அவங்க எல்லாம்.. ஹா ஹா
கட்டுரையின் துவக்கத்தை படிக்கும் போதே, எதோ எங்கள் ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையே சுத்தத்தை காரணம் காட்டி, தாக்குவது போல் தெரிந்தது... நாங்கள் என்ன சுத்தமாக இல்லையா, குளிக்கவில்லையா, உடைகளை துவைத்து உடுத்தவில்லையா என பல கேள்விகளை மனதில் எண்ணி கொண்டு, மதியம் உணவு இடைவெளியில் வீட்டுக்கு சென்று கதவை திறக்கும் போது ஒரு சிறிய பூச்சி வெளியில் ஓடியது, பூச்சியை வெளியில் தள்ளி விடலாம் என்று துடப்பத்தை தேடி கிடைக்கவில்லை.. துடப்பத்தை தேடியபடியே (ஒரு மாதத்திற்கு முன்பு, மனைவி ஊருக்கு போகும் போது சொன்ன விஷியம் நியாபகம் வந்தது...பழைய துடைப்பம் வீணாகி போச்சி, புதுசு நீங்க வாங்கிக்குங்க என்று சொன்னது!!! உண்மையிலே நான் சுத்தகாரன் தான்!!!!
Post a Comment